29 May 2013

அனிருத்தின் அசுர வளர்ச்சி! 


அனிருத் இசையமைப்பில் வெளிவந்ததோ 2 படங்கள் தான். பாடல்களுக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பு, அடுத்தடுத்து ஒப்பந்தமாகி இருக்கும் படங்களால் முன்னணி இசையமைப்பாளர்கள் பலருக்கு கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த '3' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத், அப்படத்தின் பாடல்கள் அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றது. 'WHY THIS KOLAVERI' பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. பாடல்களால் மட்டுமே அப்படத்திற்கு மிகப்பெரிய ஒப்பனிங் கிடைத்தது.

அப்படத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடித்த 'எதிர் நீச்சல்' படத்திற்கு இசையமைத்தார். அப்படத்தின் பாடல்களுக்கும் வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு ரகம், படத்தின் பின்னணி இசை என அனைத்து விதத்திலும் அனிருத்திற்கு பாராட்டு கிடைத்தது.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கும் 'வணக்கம் சென்னை', எல்ரெட் குமார் இயக்கும் படம், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம், கே.வி.ஆனந்த் - தனுஷ் இணையும் படம் என வரிசையாக இசையமைக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, என்னவென்றால் கிருத்திகா உதயநிதி படத்திற்கு முதலில் ஹாரிஸ் ஜெயராஜை ஒப்பந்தம் செய்யலாமா என்று ஆலோசித்து இருக்கிறார்கள். ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வேண்டும் என்றால், வெளிநாட்டிற்கு டிக்கெட், ஒரு நேரத்தில் ஒரு பாடல் மட்டுமே கிடைக்கும், அடுத்தடுத்து பாடல்கள் வேண்டும் என்றால் நீண்ட நாட்களாகும் என்பதால் அனிருத்தை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

அதுபோலவே ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த் படங்கள் என்றாலே இசை ஹாரிஸ் ஜெயராஜ் தான். ஆனால் இப்போது இருவருமே அனிருத்தை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். எல்ரெட் குமார் இயக்கிய முதல் படமான 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் தான். ஆனால் அவர் இப்போது அடுத்து இயக்கும் படத்திற்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.

அனிருத்தின் இந்த அசுர வளர்ச்சி, பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களிடம் கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 ---Movie updates 

No comments: